Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

சமத்துவம் இல்லாத சமுதாயம் சாம்பலாக வேண்டும்,
சாதிகளை சத்தியம் வாதம் செய்ய வேண்டும்!

மாதாக்கோயில் மணியோசை மசூதியில் ஒலிக்க வேண்டும்,
மாசிலா குரானோடு கீதையை இணைக்க வேண்டும்!

வஞ்சனையால் வளர்ந்த வன்முறை ஒழிய வேண்டும்,
வழிந்தோடும் செந்நதி அடியோடு வற்ற வேண்டும்!

மூடர்களின் நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
முறையில்லா விதிகளுக்கு கேள்விக்குறி இட வேண்டும்!

தடுமாறும் ஏழைப் பெண்களை மதிக்க வேண்டும்,
தட்சணை கேட்கும் துட்சனை மிதிக்க வேண்டும்!

வெள்ளை உடுத்தும் விதவைக்கு மறுவாழ்வு வேண்டும்,
தொல்லை படுத்தும் மடமைக்கு ஒரு முடிவு வேண்டும்!

புதியோர் உள்ளங்களுக்கு உரிய மாற்றம் வேண்டும்,
முதியோர் இல்லங்களுக்கு பெரிய பூட்டு வேண்டும்!

மதியினைக் கெடுக்கும் மதுவினை ஒழிக்க வேண்டும்,
மதியிழந்த மானுடர் மனம் செழிக்க வேண்டும்!

மகுடவெறி பிடித்த மிருகங்கள் மண்ணாக வேண்டும்,
மக்களுக்காகப் பாடுபடும் மனிதன் தலைவனாக வேண்டும்!

இவையாவும் இந்தியனின் நினைவில் கலக்க வேண்டும்,
நினைவில் கலந்த கனவு மெய்ப்பட வேண்டும்!

செவ்வானம்..!

கதிரவன் மறைந்து விட்டான்
கடலுக்கடியில்…
ஆனால் அவன்
செங்கரங்கள் தொட்ட
சுவடுகள் மட்டும்
இன்னும் மறையவில்லை….
செவ்வானம்..!!

புதுக்கவிதை..!

உனதும் எனது
நமதாகும் போது
மொட்டாகி மலர்ந்தவொரு
புதுக்கவிதை..!

காதலே…!

காதலே…
நீயும்
உலகச்சந்தையின் உறுப்பினராகிவிட்டயா..??
உள்ளத்தை வாங்கிக் கொண்டு
உயிரை இலவசமாகக் கேட்கிறாயே..!!

மௌனம்!!

நீ கடந்து போகும் நிமிடங்களில்
நம்முள் படிந்திருக்கும் மௌனம் உடைத்து
ஒன்று சொல்ல ஆசை….
“கடந்து போகாதே… மடிந்து போவேன்..!!”
கடந்து போகின்றாய் நீ!
மடிந்து போகின்றன என்
வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்..!!
“வெற்றி!!”-கொக்கரிக்கிறது மௌனம்!

ஏக்கம்..!!

நினைத்தவுடன் வாங்கலாம்  
பிஸ்ஸாவும் பர்கரும்…
மனம் மட்டும் ஏங்குகிறது 
அம்மா செய்யும் புளியோதரைக்கு…!!

வானம்பாடியிடம் பாடல்களுண்டு…
வார்த்தைகள் இல்லை…!!
தன் பாடல்களை அரங்கேற்ற
அது மேடைகள் தேடுவதில்லை..!!
வானமே அதன் அரங்கேற்ற மேடை..!!
என் கவிதைகளில் வார்த்தைகள் உண்டு…
தமிழில் வர்த்தைக்கா பஞ்சம்..??
இதோ இந்த வலைப்பக்கத்தை
என் வானமாகக் கொண்டு
என் கவிதைகளை அரங்கேற்றுகிறேன்..!!